Friday, August 4, 2017

14. வீரமாகாளி அம்மான் கோவில் திருவிழா.

வடசங்கந்தி கிராமத்தின் கிழக்கே மாரியம்மன் கோவிலில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில், வயல் காட்டில் அமைந்துள்ளது வீரமாகாளி அம்மன் கோவில். 

வடக்கு பார்த்து வீரமாகாளி அம்மன் கோவில், அதன் அருகில் கிழக்கு பார்த்து வீரன் கோவில், தூரத்தில் குளக்கரை ஓரம் தெற்கு பார்த்து சாம்பான் சிலை. 

வீரமாகாளி அம்மனுக்கு நிறைய நிலங்கள் உள்ளன. அந்த நிலங்களை அரசு அங்குள்ள விவசாயிகளுக்கு சாகுபடிக்கு கொடுத்து, ‘மா’வுக்கு நாலு கலம்(அரை மூட்டை, அல்லது பனிரெண்டு மரக்கால்) நெல் அளந்தார்கள். 

ஆடி மாதத்தில் விதை விதைத்து, தை மாதத்தில் அறுவடை என்று எப்பவும் வெள்ளாமை, விவசாயம் என்று விவசாயிகள் வயலுடன் சேர்ந்து வாழ்வார்கள். 

உழைத்து களைத்தவர்கள், கலைகள் மூலம் தங்களை உற்சாகப்படுத்திக் கொள்வார்கள். அதற்கு கோவில் திருவிழா பெரும் வாய்ப்பாக அமையும்.

திருவிழாவிற்கு எட்டு நாட்களுக்கு முன்பு காப்பு கட்டுவார்கள். மறு நாளில் இருந்து ஐந்து நாட்களுக்கு, தினமும் இரவு தெருவுக்கு அம்மன் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வீதி உலா வருவார். ஒவ்வொரு வீட்டிலும் காத்திருந்து, பூ, பழம் வைத்து, தேங்காய் உடைத்து வணங்குவார்கள். 

வடக்கு தெருவில் கடைசி வீட்டில் ஆரம்பித்து, மேலத்தெரு, கீழத்தெரு, மரத்தெரு என எல்லா இடங்களுக்கு செல்லும் அம்மன் உலா, பொழுது விடியும் போது, கோவிலை சென்றடையும். 

அங்கு வழிபாடுகள் முடிந்த பிறகு, பிரசாதம் வழங்குவார்கள். அது இரண்டு கைகளாலும் பிடிக்க கூடிய அளவுக்கு பெரிதாக இருக்கும். அதை கடித்து, கடித்து திண்பவர்களை பார்க்கும் போது அவ்வளவு கொண்டாட்டமாக இருக்கும். 

கோவிலுக்கு ஆண்களும், சிறுவர், சிறுமிகளும் மட்டுமே வருவார்கள். பெண்கள் வந்ததில்லை. பெண்கள் தெருவுடன் இருந்து விடுவார்கள். அதே போல தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் தெருவுக்கும் சென்றதில்லை. 

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாண்டகபடி காரர்கள் போட்டி போட்டு செய்வார்கள். முதல் மண்டகப்படி ராமசந்திர ராஜுவின் மகன் சுந்தர்ராஜு, இரண்டாவது மண்டகப்படி சீனிவாசராஜுவின் மகன் முத்தழகிரி ராஜு, மூன்றாவது மண்டகப்படி மாணிக்கம் பிள்ளை வகையறா, நான்காவது மண்டகப்படி உலகநாதன் வகையறா, ஐந்தாவது மண்டகப்படி மரத்தெரு காத்தமுத்து, வீரையன் வகையறா என ஒவ்வொரு குழும் பெரிய அளவில் செலவு செய்து கொண்டாடுவார்கள். 

ஒவ்வொரு நாள் இரவிலும் அவரவர் குழு பொருளாதாரத்திற்கு ஏற்ப, பாட்டு கச்சேரி, கரகாட்டம் என தூள் கிளப்புவார்கள். 

கடைசி நாள் மஞ்சள் தண்ணீர் ஊற்றி விளையாடும் நாள். 

அன்று பகலில் அம்மன் வீதி உலா வருவார். பிரமிக்கிற வகையில் மலர்களால் ஜோடித்து, பொன் நகைகள் பூட்டி அழைத்து செல்வார்கள். ஆரம்பத்தில் ஆரியலூர் கிராம மக்கள் வழிபட வசதியாக அழைத்து செல்வார்கள். 

அங்கிருந்து வடசங்கந்தி கிராம விவசாய சாகுபடிக்கு வாய்க்கால் பிரிந்து, அதிலிருந்து தண்ணீர் வருவதால், அதை அம்மன் பிறந்த இடமாக குறிப்பிடுவார்கள். பிறகு வடக்கு தெரு, மேலத்தெரு, கீழத்தெரு, மரத்தெரு, குமாரபுரம் மக்கள் வழிபடுவதற்காக அந்த ஊர் எல்லை வரை கொண்டு செல்வார்கள். 

அன்று வீட்டுக்கு வீடு கொண்டாட்டமாக இருக்கும். உறவினர்கள் தங்களுடைய உறவு முறையுள்ள வயதொத்த மாமன் மகன்கள், அத்தை மகன்கள் மீது மஞ்சள் தண்ணி ஊற்றி விளையாடுவார்கள். அது பார்க்க வேடிக்கையாக இருக்கும். 

அண்டா நிறைய நிறைந்து இருந்த மஞ்சள் தண்ணீர் காலியாகும் போது, அவர்கள் மனம் பூரிப்பில் இருக்கும். அதை அம்மன் பார்த்துக் மகிழ்வதாக கருதினார்கள். 

வீரமாகாளி அம்மன் கோவில் திருவிழா முடிந்த பிறகு காப்பு விளக்கி, அதன் தொடர்சியாக மாரியம்மன் கோவிலில் விழா நடைபெறும். பகலில் காஞ்சி காய்ச்சி வழங்குவார்கள். அதற்காக பிரத்யேகமாக பனை ஓலையில் பாத்திரம் மடித்து அதில் ஊற்றுவார்கள். 

கிராமத்தில் வாழும் அத்தனை பேரும் கஞ்சி குடிக்க ஆர்வம் காட்டுவார்கள். அதை நோய் தீர்க்கும் மருந்தாக நினைத்தார்கள். அம்மன் குறை ஆகிவிடும் என்று நேரில் வந்து குடிப்பார்கள். வயதானவர்கள், நடக்க முடியாதவர்கள் ஆகியோருக்கு வாளிகளில் கஞ்சி எடுத்து செல்வார்கள். 

தொடர்ந்து மூன்று நாள் இரவு, புதுக்கோட்டை முஸ்தபா குழுவினரின் நாடகம் நடைபெறும். முதல் நாள் வள்ளி திருமணம், இரண்டாவது நாள் பவளக்கொடி, மூன்றாவது நாள் அரிச்சந்திர மயான கண்டம் ஆகிய நாடகங்கள் நடைபெறும். நம்பி வரும் கலைஞர்களை விருந்து வைத்து கௌரவிப்பார்கள். 

கோவில் திருவிழாவை முன்னிட்டு வண்ண பலூன்கள், கருப்பு கண்ணாடி, கடிகாரம், புல்லாங்குழல், பீப்பி என பல விளையாட்டு பொருட்களும், சவ்வு மிட்டாய், பஞ்சு மிட்டாய் என பல திண்பண்டங்களும் விற்பனை செய்வார்கள். 

கோவில் திருவிழாவை நம்பி வரும் சிறு வியாபாரிகள் பலன் அடைய வேண்டும் என்றும், குழந்தைகள் கொண்டாட வேண்டும் என்றும் பொருட்களை போட்டி போட்டு வசதிக்கேற்ப வாங்குவார்கள். 

குலுக்கல் கொட்டை கடை, சீட்டு விளையாட்டு என்று ஒரு பக்கம் சிலர் பணத்தை விரயம் செய்து மகிழ்ச்சி அடைவார்கள். 

திமிறிக் கொண்டு ஓடும் பிள்ளைகளை, கை பிடித்து பத்திரமாக அழைத்து செல்லும் தாய், தங்கைகளின் பாசத்தின் வெளிப்பாடுகளை அங்கு நிறைய பார்க்கலாம். அந்த அனுபவங்களை அடுக்கி சொல்லிக் கொண்டே போகலாம். 

கோவில் திருவிழாவை சிறப்பாக செய்து முடிக்க காரணமாக இருந்த மண்டகப்படி காரர்களை, மாலை அணிவித்து மேள தாளத்துடன் வீட்டிற்கு அழைத்து வந்து கௌரவிப்பார்கள். 

இப்போதெல்லாம், வண்டி வைத்து ஜெனெரட்டார் வசதியுடன் அம்மனை கொண்டு வருவதை பார்த்திருப்பீர்கள். ஆரம்பத்தில் தலையில் தூக்கி வந்திருக்கிறார்கள். அப்படி தலையில் சுமந்து வந்தவர்களில் என்னுடைய தந்தையும் ஒருவராக இருந்திருக்கிறார்.

1 comment:

  1. அருமையான பதிவு ஆனால் முகம் சுழிக்கும் விதத்தில் எழுதப்பட்ட வார்த்தை தாழ்த்தப்பட்ட மக்கள்...! எந்த விதத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள்..? பூர்வீக தமிழ் குடி வேளாண்மையை தொழில் செய்து இந்திரனை வணங்கி ஏரும் போரும் தொழிலாக வாழும் தேவேந்திர குல மக்கள் தாழ்த்தப்பட்ட மக்கள்..! ஆம் தெலுங்கு பேசும் வந்தேறிகள் உயர் சாதி என்றால் ஊருக்கு சோறு போடும் சேற்றில் உழைப்பவர்கள் எந்த விதத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள்..?
    உங்கள் பத்திரிகை தர்மம் இந்த அதி தொழிநுட்ப உலகில் இதுதானா..?

    தேவேந்திர குல மக்களின் வரலாற்று சான்றுகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது... நன்றி

    ReplyDelete